அக்ரி இன்டெக்ஸ் 2016

கோவையின் மிகப் பெரிய விவசாய மற்றும் தோட்டக்கலை கண்காட்சி அக்ரி இன்டெக்ஸ், போன வாரம் இனிதே நிறைவடைந்தது. வழக்கம் போல ப்ளாக் நண்பர்களின் சந்திப்பு, விதைகள் மற்றும் தோட்டம் பொருட்கள் சில வாங்குவது என்று சனி, ஞாயிறு என்று இரண்டு நாளும் கொடிசியா வளாகத்தில் தான்.

சென்னையில் இருந்து ப்ளாக் நண்பர் கோபால் அண்ணன் வந்திருந்தார்கள். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு கொடிசியா கிளம்பினோம். கொடிசியா வளாகத்திற்கு வெளியே ஈஷா மையம் அமைத்திருந்த நாற்றுப் பண்ணை மற்றும் தேனி வளர்ப்பு பண்ணைகள், தென்னை, வாழை கன்றுகள் என்று நிறைய நர்சரி இருந்தது. நான் ஈஷா நர்சரியில் இருந்து இரண்டு வல்லாரை கீரை நாற்றுகள் (ஒன்றின் விலை ரூ.10) வாங்கிக் கொண்டேன். நிறைய மூலிகை செடி நாற்றுகள் (திப்பிலி, சித்தரத்தை, கரிசலாங்கண்ணி) வைத்திருந்தார்கள். வேண்டுமென்றால் நாம் அவர்களது பீளமேடு அலுவலகத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். விவரம் கீழே,

isha

 

போன வருடத்தின் கூட்டத்தை வைத்து பார்த்தால் இந்த வருடம் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. சில இடங்களில் மட்டும் கூட்டம் நகர விடாமல் தேங்கி நின்று கொண்டிருந்தது. நர்சரி தோட்டங்களை முடித்து மெயின் ஹாலுக்குள் நுழைந்தோம். சென்னையில் இருந்து வந்திருந்த இன்னொரு நண்பர் ராஜேஷ்-ம் சேர்ந்து கொண்டார். வழக்கம் போல வீட்டுத் தோட்டம் குருப் தான் முக்கால்வாசி. Hall A-ல் தொடக்கத்திலேயே சுபிக்க்ஷா ஆர்கானிக் ஸ்டால் இருந்தது. விதைகளை எல்லாம் பட்டாசு கடை போல பட்டியல் போட்டு ஸ்லிப் வைத்திருந்தார்கள். நமக்கு என்ன தேவை, எத்தனை தேவை என்று மார்க் செய்து கொடுத்தால் எடுத்து கொடுத்தார்கள். அர்ஜுன் சாரிடம் (நிறுவனர் – சுபிக்க்ஷா ஆர்கானிக்) கொஞ்ச நேரம் பேசி விட்டு, சில விதைகள் வாங்கிக் கொண்டோம். பஞ்சகாவ்யாவும் வைத்திருந்தார்கள். விலை லிட்டர் ரூ.150. ‘நாட்டு மாடு பொருட்களில் செய்தது. அதனால் கொஞ்சம் விலை அதிகம்’ என்றார் அர்ஜுன் சார். நமக்கு ஸ்பெஷல் ஆபர் என்று ரூ.100 என்று ஆளுக்கு இரண்டு வாங்கிக் கொண்டோம்.

612345

 

அடுத்தது எங்கு பார்த்தாலும் ‘அக்ரோ ப்ராடக்ட்’ என்ற பெயரில் ஜீவன், சக்தி, அல்ட்ரா ஆக்சன் என்று டப்பா டப்பாவாய் Micros, Humic Acid, Growth Promoters என்று வைத்துக் கொண்டு வகை வகையாய் ஸ்டால்கள். கோபால் அண்ணன் எதாவது வாங்கியே தீருவேன் என்று ஒரு கடையில் விசாரித்துக் கொண்டிருந்தார். ‘என்ன போட்டிருக்கீங்க. எத்தனை ஏக்கர்’ என்று வழக்கமான கேள்விகள் ஸ்டாலில் இருந்து வந்தது. பெரிய பாட்டில்கள் எல்லாம் விலை ஆயிரம், இரண்டாயிரம் என்று இருந்தது. வேருக்கு என்று ஓன்று, இலைக்கு என்று ஓன்று, தண்டுக்கு என்று ஓன்று, பூவுக்கு என்று ஓன்று என்று வகை வகையாய் (செடி பாவம்யா. விட்டுருங்க J ). அண்ணன் ஒரு பாட்டிலின் காலாவதியான வருடம் 2012 என்று இருக்கவும், அலர்ட் ஆகி ‘நாலு வருடமா கடைய தொறக்காமவாடே வச்சிருக்கீங்க. உள்ளே இருக்கற நுண்ணுயிர்கள் எல்லாம் செத்து சுண்ணாம்பாகி இருக்குமேப்பா’ என்று தெறிச்சி ஓடி வந்துட்டோம். எந்த விவசாயி வாங்கி போய் ஆளுயர வாழைத்தார் வரும் என்று காத்திருக்க போகிறாரோ.

அடுத்ததாய் டப்பாவில் இருந்து பாக்கெட். கோபால் அண்ணன் போன ஸ்டாலில் ஏதும் பர்சேசிங் செய்ய முடியாததால் இந்த ஸ்டாலில் எதாவது வாங்கியே ஆக முடிவு செய்தார். தோட்டத்தில் எறும்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு கேட்போம் என்று ஆரம்பித்தோம். பொள்ளாச்சி அருகில் உள்ள கல்லூரி மாணவிகள் சிலர் கடையில் வாலண்டியராக ஒவ்வொரு பாக்கெட்டின் பெருமைகளை சொன்னார்கள். கரையான் படம் போட்டு ஒரு பாக்கெட்டில் பட்டியலில் எறும்பும் இருந்தது. விலை ரூ. 500. ஆளுக்கு பாதி எடுத்துக்கலாமா என்றார். ஐம்பது ரூபாய்க்கு இதே அளவுக்கு நான் எறும்பு பவுடர் வாங்கி தரேன் என்று கூறி நிறுத்தினேன். நான் என் பங்குக்கு ‘வெண்டைல வர்ற மாவுப் பூச்சிக்கு பவுடர் ஏதும் வச்சிருகீங்களா?’ என்று கேட்டேன். அந்த புள்ள ‘போட்டோ புடிச்சி எங்களுக்கு வாட்ஸ்-அப்-ல அனுப்புங்க சார். பார்த்து சொல்றோம்’ என்றாள். ‘மாவுப் பூச்சி தெரியாதாம்மா.. என்னம்மா. இப்படி பண்றீங்கலேம்மா. மாவுப் பூச்சி தெரியாம அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்ல என்னம்மா பண்றீங்க’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். கடைசியில் அந்த புள்ள அண்ணனை அன்றைய Most Valuable Customer-ஆ பார்த்தது கண்ணிலேயே தெரிந்ததால் மனசு வருத்தப்பட கூடாது என்று அண்ணன் 100 ரூபாய்க்கு அனைத்து வைட்டமின் மினரல்களும் அடங்கிய ஒரு உர பாக்கெட் மட்டும் வாங்க, அடுத்த ஸ்டாலை பார்த்து நடக்க ஆரம்பித்தோம்.

Hall B-ல் இன்னொரு ப்ளாக் தோழி லதா அரவிந்தன் மேடமும், அரவிந்தன் சாரும் சேர்ந்து கொண்டார்கள். என்னை பார்த்தவுடன் முதலில் பையில் இருந்து ஒரு விதை பாக்கெட் எடுத்து கொடுத்தார். ‘எங்கள் தோட்டத்தில் நன்றாக விளைந்த பாகல் விதை’ என்று ஒரு பக்கெட், அழகாக பூக்கும் என்று சில கிழங்குகள், ஒரு கீரை விதை பாக்கெட் ஓன்று. நான் போன பதிவில் கூறிய மாதிரி தோட்டம் நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் நமது முதல் நலம் விசாரிப்பு இது தான் J. நாம் எல்லாம் வீட்டில் தோட்டம் போடவே நேரம் இல்லை என்கிறோம், லதா மேடம் ஓசூரில் பக்கத்து காலி இடம் ஒன்றையும் எடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களை சேர்த்து Community Garden ஓன்று ஆரம்பித்து இருக்கிறார்கள். அதைப் பற்றி அரவிந்தன் சார் ரொம்ப நேரம் பேசிக்கொண்டே வந்தார்.

Hall B முழுக்க எந்திர மயம் தான். தென்னை மரம் ஏறும் கருவிகள், சின்ன சின்னதாய் டிராக்டர் என்று தொடங்கி மலை விழுங்கி அறுவடை மெஷின்கள் வரை இருந்தது. கோபால் அண்ணன் Tata steels & tools ஸ்டாலில் இருந்து மண்வெட்டி, களை எடுக்கும் அருவாள் என்று ஒரு பெரிய பர்சேசிங் செய்ய, நானும் அய்யனார் கையில் இருக்கும் சைசில் ஒரு அருவா வாங்கிக் கொண்டேன் (வீட்டை சுற்றி இருக்கும் கருவேல மரங்களை வெட்ட தான்).

hallb1hallb2

 

Hall-C-ல் மறுபடி கொஞ்சம் நாட்டு விதைகள் கடை, மாடித் தோட்டம் கடைகள் என்று ஒரு சுற்று வந்தோம். சில கடைகளில் நர்சரி ட்ரே இருந்தாலும் எல்லாமே 98 குழிகள் கொண்ட சின்ன ட்ரே தான் இருந்தது. எங்கு தேடியும் 50 குழிகள் கொண்ட ட்ரே கிடைக்கவில்லை.    லதா மேடம் அவர்கள் Community Garden-க்கு பவர் ஸ்ப்ரே ஓன்று வாங்கலாம் என்று பார்த்தார்கள். பெரிய ஸ்ப்ரேயர் Manual Type Rs.1000, Battery Operated Rs.2500, Battery Operated with Solar powered Rs.4000 என்ற விலையில் இருந்தது.

வழக்கம் போல விகடன் குழுவில் இருந்து விகடன் பதிப்பத்தில் இருந்து புத்தகங்களும், வார இதழ்களுக்கான சந்தா உறுப்பினர்கள் சேர்ப்பும் இரண்டு ஸ்டால்களில் நடந்து கொண்டிருந்தது. நான் இரண்டு நாட்டு மருந்து பற்றிய புத்தகங்களும், இயற்கை வேளாண்மை புத்தகம் ஒன்றும் வாங்கினேன். ‘வீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்’ என்று ஒரு புத்தகத்தை பார்த்த போது முன்பு ஒரு முறை விகடன் பதிப்பகத்தில் இருந்து ஒரு புத்தகத்திற்கு எனது ப்ளாக்கில் சில தகவல்களை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தார்கள். இந்த புத்தகத்தை பார்த்த போது லேசாய் ஒரு ஆர்வம் வர புரட்டி பார்த்த போது இரண்டு கட்டுரைகள் என் கட்டுரையாக கொடுத்திருந்தார்கள். ‘அனுபவமே ஆசான்’, ‘என் கேள்விக்கென்ன பதில்?’ என்று தலைப்பில் தோட்டம் பிளாக்கில் இருந்து படங்களோடு விவரங்கள் பயன்படுத்தி இருந்தார்கள். ‘வீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்’ புத்தகத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், புத்தகம் ஒரு அனுபவ தொகுப்பாகவே வந்திருக்கிறது. விகடன் பதிப்பத்தின் வெப்சைட்டிலேயே கிடைக்கிறது.

b1b2b3b4

 

பொதுவாய் Hall A, B, C-ல் மட்டும் தான் ஸ்டால்கள் இருக்கும். போன வருடத்தில் இருந்து Hall D-யிலும் ஸ்டால்கள் இருக்கிறது. TNAU ஸ்டால்கள் எல்லாமே Hall D தான். கொஞ்சம் விதைகள் வாங்கலாம் என்று TNAU ஸ்டாலை பார்த்த போது பாக்கெட் ரூ.20 என்றார்கள். TNAU வெண்டிங் மெஷின்லையே Rs.10 தானே என்று யோசித்து கொண்டிருந்த போது ஒருவர் ஓடி வந்து ‘சார்! இங்க வாங்காதீங்க. அடுத்த வரிசைல இன்னொரு கடை இருக்கு. அங்கே ரூ. 10 தான்’ என்றார். ஏன் இந்த ஏமாற்று வேலை என்று தெரியவில்லை. கொஞ்சம் போய் பார்த்தால் அதே TNAU ஸ்டால், 13 அடங்கிய பாக்கெட் Rs.130 என்று கட்டி வைத்திருந்தார்கள். தனி தனி பாக்கெட்டாகவும் வாங்கி கொள்ளலாம். ரூ. 10 தான். கத்தரி விதை ஓன்று வாங்கி கொண்டேன்.

Omaxe விதைகளுக்கு மட்டும் கிட்டதட்ட ஆறேழு ஸ்டால்கள் இருந்தது. தோட்டத்தை கொஞ்சம் வண்ணமயமாக்கவும், வண்ணத்துப்பூச்சி, தேனீக்களை கவரவும் செண்டு பூ விதையும், ஜினியா பூ விதையும் வாங்கினேன்.

seed

 

Hall D யை முடித்து விட்டு இன்னொரு ப்ளாக் நண்பர் இளங்கோவையும் சந்தித்து விட்டு அன்றைய விசிட்டை முடித்தோம். மதியம் ஒரு மணிக்கு Hall A-ல் ஆரம்பித்து Hall D-ல் இருந்து வெளியே வரும் போது 6:30 ஆகிவிட்டது. சனிக்கிழமை மாலையில் இன்னொரு ப்ளாக் நண்பர் சிவகுமார் அழைத்து ஞாயிறு காலை வருவதாக கூறினார். தோட்டம் ப்ளாக் மூலம் கிடைத்த ஒரு விவசாய நண்பர். ஊர், தாராபுரம் அருகில் ஒரு கிராமம். முழுக்க விவசாயத்தில் இருந்தாலும் வீட்டுத் தோட்டம் பற்றியும் நிறைய பேசுவார். ரொம்ப நாளாக சக்கரைவள்ளி கிழங்கு (ஊரில் சீனி கிழங்கு என்போம்) செடி ஓன்று கேட்டிருந்தேன். அதோடு எனக்காக எப்பவும் போல நாட்டு மாட்டின் சாணமும், கோமியமும் கொண்டு வருகிறேன் என்றார். அவ்வளவு தூரத்தில் இருந்து காரில் எனக்காக சாணமும், கோமியமும் எடுத்த வரவும் ஒரு மனது வேண்டும். அந்த வகையில் தோட்டம் ப்ளாக் சம்பாதித்து கொடுத்த சில நல்ல நண்பர்களில் சிவகுமாரும் ஒருவர்.

ஞாயிறு காலை, குடும்பத்தோடு நண்பர் சிவகுமாரையும் சந்தித்து இரண்டு மணி வரை இன்னொரு ரவுண்ட் சுற்றிவிட்டு வீடு வந்தோம். சக்கரைவள்ளி கிழக்கு செடியையும் வாங்கி வைத்து விட்டு, அவர் கொண்டு வந்த சாணம், கோமியம் கொண்டு ஜீவாம்ருதம் தயாரிப்பது குறித்தும் சொல்லிக் கொடுத்தார். மூன்று பக்கெட் அளவுக்கு தயார் செய்து வைத்திருக்கிறேன். இந்த வாரம் எல்லா பாத்திகள், மாடி தோட்டத்திற்கும் ஊற்றி விட வேண்டும்.

jeeva

போன மாதம் அவர் கலந்து கொண்ட சுபாஷ் பாலேக்கரின் ஜிரோ பட்ஜெட் விவசாயம் ஒரு வார பயிற்சி வகுப்பு பற்றி நிறைய கூறினார். ஒரு முழுநேர விவசாயியாய் அவரிடம் இருந்து வீட்டு தோட்டத்திற்கு நிறைய அறிவுரைகள் பெற்றிருக்கிறேன். அவரிடம் அக்ரி இன்டெக்ஸ் முழுக்க நிறைந்து கிடக்கும் வைட்டமின் கடைகளை பற்றி கேட்டேன். இந்த மாதிரி அக்ரோ ப்ராடக்ட் உண்மையிலே ஒரு சாதாரண விவசாயிக்கு பயன்படுகிறதா என்று. ‘ஏமாந்த விவசாயி வருடத்திற்கு பத்து பேர் கிடைத்தால் அவர்கள் பொழப்பு ஓடும். அவ்வளவு தான்’ என்று முடித்து விட்டார்.

நாட்டு மாட்டின் சாணம் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவை இல்லை என்பது தான் இப்போதைய இயற்கை விவசாயத்தின் பாதை. அதை தான் ஐயா நம்மாழ்வாரும் கூறினார், சுபாஷ் பாலேக்கரும் கூறுகிறார். ஆனாலும் அக்ரி இன்டெக்ஸ் முழுக்க சில நூறு கடைகள் இருந்தாலும் எங்கேயுமே அந்த தடயம் இல்லை. பஞ்சகாவ்யா கூட எங்கேயும் காண முடியாது. இது போன்ற கண்காட்சிகளில் எல்லோருமே விவசாயத்தை ஒரு வியாபாரத்துக்கான ஒரு தளமாய் மாற்றுவதில் மட்டுமே மும்முரமாய் இருக்கிறார்கள். எல்லோரும் இயற்கையை அவரவர் தொழில்நுட்பத்தில் ஒரு குடுவைக்குள் அடைக்கவே முயற்சிக்கிறார்கள். விதை விற்கும் கடைகளை எடுத்துவிட்டு பார்த்தால் கண்காட்சியில் நமக்கு பெரிதாய் ஒன்றும் இல்லை என்று தான் கூற வேண்டும். மற்றபடி நண்பர்களின் சந்திப்போடு இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் சிறப்பாகவே முடிந்தது.

30 thoughts on “அக்ரி இன்டெக்ஸ் 2016

  1. நன்றி சிவா…..

    என்றுமே உங்கள் வார்த்தைகள்…..
    எங்கள் வழிகாட்டி…..

    என் பள்ளி காலத்தில் வகுப்பில் ஆசிரியர் சொன்ன கதை ஞாபகம் வருகிறது……

    வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த புதிய இயந்திரத்தில் பழுது….

    தொழிற்சாலை  முதலாளி மிகுந்த செலவு செய்து அதை சீர் செய்ய பொறியாளரை வரவழைக்கிறார்…

    வந்தவர் ஒரு இடத்தில் பிடியிழந்த நெட்டை இருக்கமாக பொருத்துகிறார்…..இயந்திரம் இயங்க துவங்குகிறது…..

    முதலாளிக்கு பெருத்த ஏமாற்றம்….இந்த வேலையை செய்யவா இவ்வளவு செலவு….கேட்டும் விடுகிறார்….

    அந்த வெளிநாட்டு பொறியாளர் முகத்தில் புன்னகை…..

    பிடியிழந்த நெட்டை இருக்க உங்கள் தொழிலாளி போதும்….

    ஆனால் அது எந்த இடத்தில் என கண்டுபிடிக்க என் மூளை வேண்டும்….அதற்குத்தான் இந்த காசு…..

    செலவில்லா விவசாயத்தின் அனைத்து மூலப்பொருட்களும்….ஒரு விவசாயிக்கு அவன் வாழ்விடத்தின் எல்லைக்குட்பட்டே கிடைக்கும்போது……

    பாரம்பரிய தொடர்பு அறுந்து தவிக்கும் நவீன விவசாயிக்கு ….அதன் தொழில்நுட்பத்தை கற்றுத்தராமல் இயற்கை விவசாயம் தழைக்காது…….

    செய்ய வேண்டிய அரசாங்கம் மானிய விலையில் யூரியா கொடுத்து கடமையை முடித்துக்கொள்கிறது…..

    நம்மாழ்வார், ஆர்.எஸ்.நாராயணன்,பாலேக்கர் குரல்கள்…..

    ஜோதிகாவின் மறுபிரவேசத்திலும்,நயன்தாராவின் காதல் முறிவிலும்…..

    காணாமல் போய்விடுகிறது……

    தினசரி செய்தித்தாள் வாசிக்க தவறாத நான்…..

    நம்மாழ்வார் பற்றிய செய்தியை பிரபலமான தினசரிகளில் கண்ட நாள்……

    அவர் இறந்த நாள்……

    காசுக்காக உடலோடு மனசாட்சியையும் விற்றுவிட்ட ஊடகங்கள்…….

    இன்றைய நரம்பில்லாத விவசாயத்தின் சாட்சி அக்ரி இன்டெக்ஸ்…….

    உங்கள் அனுபவ பகிர்விற்கு நன்றி……

    இதே போல் நானும் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்…..

    Like

    • நன்றி சுரேஷ். நல்ல உதாரண கதை சொல்லி இருக்கிறீர்கள். ஊடகங்கள் காசுக்காக கூவும் ஊடகங்களாகி பல வருடங்கள் ஆகி விட்டது. ஊடங்களை விட மக்களை தானே குறை சொல்ல வேண்டும். இங்கே முக்கால்வாசி பேருக்கு முகநூலும், வாட்ஸ்அப்-பும், ஊடகங்களும் உருவாக்கும் ஒரு உலகம் தானே அவர்களது தினசரி எண்ணங்களை முடிவு செய்கிறது. நாம் முடிந்த அளவுக்கு இதில் இருந்து விலகி இருந்தாலே போதும்

      தோட்டம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? ஆடி பட்டத்திற்கு ஏதும் விதைத்தீர்களா?.

      கண்டிப்பாக கோவை வந்தால் சந்திக்கலாம். திட்டமிடுங்கள்

      Like

  2. Super Siva Sir.

    I have heard about the expo but not able to come there. Anyway I missed the golden opportunity to meet all your friends. But I can visualize from your writings what would happanings there.

    Nice..Siva sir…I am very happy to read your blog. Extremely look forward more writings.

    As Sure Mahalingam sir said that it is very true. Your are my roll model for the Gardening. Will meet you soon sir.

    Thanks and all the very best sir…
    Ramesh S

    Like

    • Thanks Ramesh. We will do whatever possible things around natural gardening. Happy to see others also starting this slowly.

      Plan a visit to Coimbatore during next agri expo. We will definitely meet.

      Like

  3. Your Writing style(Writing way) is super, I Never missed a single word. Super Siva,

    Thanks with Regards,
    Vallamuthu M.

    Like

  4. YOU ARE CORRECT ANNA, NOW A DAYS AGRICULTURE IS A TREND FOR THE COMPANIES / MARKETING PEOPLES TO SELL THEIR PRODUCTS, MOST OF THEM DONT KNOW FOR WHAT PURPOSE THEY ARE BUYING SOME PRODUCTS.

    Like

    • 🙂 Right. Atleast few stalls can be dedicated for organic farming and other natural farming awareness by the organizers without any commercial flavor.

      Like

  5. அக்ரி இன்டெக்ஸ் பொறுத்தவரை இயற்கை விவசாயத்திற்கான வழகாட்டுதல் என்று எதுவும்

    இல்லை சிவா சார் சொன்ன மாதிரி ஆர்கானிக் என்ற பெயரில் கொட்டி வைத்திருக்கிறார்கள்,

    நம்மாழ்வாரின் உரைகளை கேட்டாலும் அவரின் புத்தகங்கள் படித்தாலும் இந்த உரங்கள்

    (ஆர்கானிக்) தேவையில்லை என்பது தெரியும். அங்கிருந்த ஸ்டால்களில் பைகளில் காய்த்து

    தொங்குவதை பார்த்து எத்தனை போ் வாங்கி போனா்களோ தெரியவில்லை. புதிதாக

    தோட்டம் தொடங்குபவர்கள் தோட்ட கருவிகள்,விதைகள் பற்றிய விவரங்களை தெரிந்து

    கொள்ளலாம் விலை கடையை விட குறைவாக இல்லை. மற்ற நாட்களில் தோட்ட

    பொருட்களை வாங்க நேரம் ஒதுக்க முடியாதவர்கள் நிதானமாக சுற்றி பார்த்து

    அவசியமான சில பொருட்களை மட்டும் வாங்கலாம்.

    Like

    • உண்மை தான் மேடம். சில தோட்ட கருவிகள் நிறைய கடைகளில் விசாரித்தால் ஓரளவுக்கு நியாயமான விலையில் கிடைக்கும். அங்கே வாங்குவதற்கு நீங்கள் சொன்ன மாதிரி நேரம் இல்லை என்றால் வாங்கி கொள்ளலாம்.

      Like

  6. அக்ரி இன்டெக்ஸ் வீட்டுத்தோட்டம் வளர்ப்பவர்களுக்கு மொத்தத்தில் ஒரு பெருத்த

    ஏமாற்றத்தை தந்திருக்கிறது என்பது நன்கு புரிகிறது.

    ஈஷா மையம் அமைத்திருந்த நாற்றுப் பண்ணை விவரம் எனக்கு பயனுள்ளது நன்றி,மூலிகை

    செடிகளை பீளமேட்டிலேயே வாங்கிக்கொள்வேன்.

    அக்ரி இன்டெக்ஸ் இந்தமுறை நான் செல்ல இயலாமல் போனதால் தவறவிட்டது விதைகள்

    மற்றும் பிளாக் நண்பர்கள் சந்திப்பு மட்டுமேபோலும்.

    அக்ரி இன்டெக்ஸ் வியாபார தளம்.அங்கு நாம் பெரிதாக ஒன்றும் கற்றுக்கொள்ள

    இயலாதுதான்.

    சற்றே விரிவான வெளிப்படையான கருத்துப்பதிவிற்கு நன்றி பல.

    Like

    • ஆமாம் அக்கா. நண்பர்கள் சந்திப்பில் உங்களை தான் மிஸ் பண்ணினோம். கோவை நண்பர்களுக்கு புதிதாய் ஏதும் இருக்கவில்லை. ஆனால் புதிதாய் வந்த நண்பர்களுக்கு நிச்சயம் இவ்வளவு பெரிய கண்காட்சி ஆச்சரியத்தை கொடுத்திருக்கும்.

      Like

  7. Siva, it was nice meeting you & first time visited Agri Intex , nice. Iam trying my best to form my new terrace garden. Please guide me.

    Like

  8. வணக்கம்…

    கடந்த சிலமாதங்களாகவே உங்கள் பிளாக் ,மற்றும் இணைய பக்கத்தை படித்து வருகிறேன்.அந்த உந்துதலில்

    வீட்டுத்தோட்டம் அமைத்திருக்கிறேன். பெரிதாக சாதிக்க வில்லை என்றாலும் நிறைய கற்றுக்கொண்டேன்

    அ.தமிழ்ச்செல்வன்.மதுரை திருமங்கலம்.ஒரு பல்சுவை ப்ளாக் நடத்தி வருகிறேன்

    Like

    • உங்கள் புதிய தோட்டத்திற்கு வாழ்த்துகள் தமிழ்ச்செல்வன். தொடருங்கள். ஏதும் விவரங்கள், கேள்விகள் இருந்தால் ஒரு மடல் அனுப்புங்கள்.

      Like

  9. சென்னை நியூ பெருங்களத்தூரில் 1 கிலோ 5.50 ரூபாய்க்கு மண்புழு உரம் கிடைக்கிறது என்பது correct adress

    theareyalayea anna. enga per Rs. 30 than athegama eruku. entha adress keadacha nalla erukkum. sareya நியூ

    பெருங்களத்தூரில் எங்கனு தகவல் இல்லை. thearenja sollunga anna

    Like

    • கவி, உங்களுக்கு வேண்டிய தகவலை மற்றொரு பதிவில் நண்பர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

      Like

  10. “agri intex” பதிவு மிகவும் அற்புதம் சிவா. தங்களது எழுத்தில் ஈர்க்கப்பட்டு அந்த கொடிஸியா ஹாலில் சில நேரம் உலாவிய அனுபவம் ஏற்பட்டது. 🙂 கோவை மக்கள் அதுவும் தோட்டம் வைப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு இது ஒரு விழா போல இருந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    Like

    • அடுத்த முறை (ஜூலை 2017) நீங்களும் ஒரு ட்ரிப் திட்டமிடுங்கள் மதன் 🙂

      Like

  11. Dear Siva,

    Nice Article about sharing Agri Expo and our experience on 2 days. Saturday was going fun when we see lot of stalls with power Boosters for plants ( i really felt that even plants need some extra energy like gim boys taking muscle building powder) but when i see the date of manufacturing (2012) and and date of expiry ( 2014) i shocked that these brands are really meant for people with grace in roof garden / Organinc farming and not for the real quality agriculture.

    I need to be more careful since i am more excited type of person when spending for Plants and growth promoters. ( You may be laughing when i visit all stalls and intend to purchase something from them).

    Its great two days for myself and my son spent some valuable time with you siva. Thanks for the support & courtesy.

    Like

  12. Hai Siva sir,
    Nanum Saturday codissia vanthen. But ungalai parka mudiyala.. Actually na Madurai. Oru marriage kaga vanthom. Apadiye agri intex attaend pandra chance kidaichathu. Very happy..

    Nanum konjam seeds lam vanginen sir. And Rajshree SamarthaG An organic plant growth vitalizer and Bio green N.P.K uram vanginen sir. Ethalam nalla erukuma sedi Ku use panna? Plz reply

    Like

    • Good to hear about your visit. Sorry for the delay in reply. Hope you got some idea and used the organic plant growth. நான் எழுதிய படி எனக்கு இந்த ஆர்கானிக் கடைகளில் பொருட்கள் பற்றி பெரிதாய் விவரம் இல்லை.

      Like

  13. சிவா அவர்களுக்கு,

    உங்களுடைய பதிவு மிக்க பயனுடையதாய் இருந்தது. உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளைப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

    நன்றி.

    Like

Leave a comment